இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் மணிரத்னம். 9 ஃபிலிம் ஃபேர் விருதுகள் 6 தேசிய விருதுகள் இன்னும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளை வென்று குவித்த மணிரத்னம் அடுத்த இயக்கும் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய இடைவெளிக்கு பின் இந்த இரண்டு ஜாம்பவான்கள் இணையும் புதிய திரைப்படமான KH234 திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தனது திரை பயணத்தில் மணிமகுடமாக, தனது கனவு படைப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புதமான வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம், எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் இணைந்து திரைக்கதை அமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகின.

அதில் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாகஸ் ஆபீஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலான அக நக பாடல் வெளியான நிலையில், வருகிற மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இதர பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாக உள்ளன. முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள அந்த அறிவிப்பு இதோ…