பொள்ளாச்சியில் கள்ளக் காதல் மோகத்தால் 3 வயது குழந்தையைக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் பகுதியைச் சேர்ந்த குமரவேல் - பேச்சியம்மாள் தம்பதிக்கு, 5 வயதில் அழகுவேல் என்ற குழந்தையும், 3 வயதில் மதியழகன் என்ற குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில், 22 வயதான பேச்சியம்மாளுக்கும், திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அவரது அத்தை மகன் பிரகாஷ் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது.

இருவருக்கும் கள்ளக் காதல் மோகம் முற்றிய நிலையில்,கடந்த வாரம், பேச்சியம்மாள் தனது 3 வயது குழந்தை மதியழகனை தூக்கிக்கொண்டு, அத்தை மகன் பிரகாஷ்சுடன் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி உள்ளார். இதனையடுத்து, பொள்ளாச்சி அருகே நல்லூரில் இவர்கள் வாடகை வீட்டில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

சம்பவத்தன்று, 3 வயது குழந்தை மதியழகன் மயக்கமடைந்ததாகக் கூறி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார். மேலும், குழந்தையின் கழுத்து மற்றும் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பது குறித்து மருத்துவர்கள் கேள்வி எழுப்பனர். இதனால், பயந்துபோன பிரகாஷ், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

இதனையடுத்து, மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார் பேச்சியம்மாளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக் காதலன் பிரகாஷ், 3 வயது குழந்தையை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பிரகாஷை, அதிரடியாகச் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கள்ளக் காதல் மோகத்தால், 3 வயது குழந்தையை, கள்ளக் காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.