தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவரது முதல் படமான ‘3’ படத்திலே மிகப்பெரிய பிளாக் பஸ்டர் அடித்து மக்களிடையே கவனம் பெற்றார். பின் தொடர்ந்து வை ராஜா வை படம் கொடுத்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றார். அதன்பின் தற்போது லைகா தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் என்ற கிரிக்கெட் கதை சார்ந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரைத்துறையில் சில இடைவெளி விட்டு படங்களை இயக்கினாலும் திரைத்துறையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெயருக்கு ஒரு அந்தஸ்து இருந்து கொண்டு தான் வருகிறது. காரணம் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள், மற்றும் நடிகர் தனுஷ் அவர்களின் மனைவியும் ஆவர். சமீபத்தில் தனுஷுடன் ஏற்பட்ட திருமண முறிவு காரணமாக தன் மகன்களுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப் பட்டுள்ளது என தேனாப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி காந்த் அவர்களின் வீட்டில் என லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் மேலும் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன்படி அந்த வழக்குபதிவினை தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.