மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் சீயான் விக்ரம் கூட்டணியின் தங்கலான் திரைப்படத்தில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகை பார்வதி அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். ஆகச் சிறந்த இயக்குனரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் தங்கலான். சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் தங்கலான் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் வேறு விதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். சமீபத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்த நடிகர் சீயான் விக்ரம் தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்திருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து தங்கலான் திரைப்படத்தின் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சந்தித்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தங்கலான் திரைப்படத்தில் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அடுத்த சில தினங்களில் தங்கலான் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தங்கலான் படத்தில் நடிகை பார்வதி தற்போது தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது அன்பான நண்பர் சமீபத்தில் எனக்கு ஒரு வாக்கியத்தை அனுப்பினார். தங்கலான் திரைப்படத்தில் நான் பணியாற்றிய என்னுடைய அனுபவத்தை கூற அந்த வாக்கியத்தை விட மிகச் சரியான அறிக்கையை என்னால் தேட முடியவில்லை. “காதல், பணம், புகழ் இவை அனைத்தையும் விட எனக்கு உண்மையை கொடுங்கள்”. இந்தப் படத்தில் நான் நடித்த அந்த கதாபாத்திரத்திற்காக நான் சென்ற ஒவ்வொரு இடமும், நான் எடுத்த ஒவ்வொரு துருப்பங்களும், நான் செய்த ஒவ்வொரு தேர்வும் எனது சுவர்களையும் முகமூடிகளையும் தூசுகளாக நொறுக்கியது அதில் உண்மை மட்டுமே எஞ்சியது இது எனக்கு மிகவும் முக்கியமானது.” எனக் குறிப்பிட்டு தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு இதோ…