ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் ஆகச் சிறந்த இயக்குனரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை நடிகை பார்வதி பகிர்ந்து கொண்டார். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி ரசிகர்களுக்கு வெரைட்டியாக விருந்து வைக்கும் நடிகர் சீயான் விக்ரம் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் சீயான் விக்ரம். சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.

PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் தங்கலான் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் வேறு விதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முன்னதாக சீயோன் விக்ரமின் பிறந்த நாள் தினத்தன்று வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்த நடிகர் சீயான் விக்ரம் தற்போது பூரண குணமடைந்திருப்பதாக தெரிகிறது. அதே போல் தங்கலான் படத்தின் அதிரடி சண்டை காட்சிகளுக்காக நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் பயிற்சி உட்பட சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் இன்னும் கடைசியாக 20 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில், தயாராகும் நடிகை பார்வதி தனக்கான மேக்கப்பில் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு தங்கலான் படப்பிடிப்பில் இருப்பதை தெரிவித்து இருக்கிறார். வைரலாகும் நடிகை பார்வதி வெளியிட்ட அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.