பிரபல தென்னிந்திய நடிகர் பிரபாஸ் முகநூல் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்ஸ். இது குறித்து பிரபாஸ் வெளியிட்ட தகவல் ரசிகர்களால் வைரல். எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலகமெங்கும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்த பாகுபலி படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி 1,2 வெற்றிக்கு பிறகு பான் இந்திய திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் நடிகர் பிரபாஸ் அதன்படி, சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு பிரபாஸிற்கு இப்படம் கைகொடுக்க வில்லை. அதை தொடர்ந்து தற்போது பிரபாஸ் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் கூட்டணியில் ‘சலார்’ என்ற படத்தில் நடித்து வறுகிறார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் நடிக்க கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். மிரட்டலான ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இப்படத்தையடுத்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்திய சினிமாவில் உருவாகும் ‘கல்கி AD 2898’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க இவர்களுடன் உலக நாயகன் கமல் ஹாசன் வில்லனாக இப்படத்தில் நடித்து வருகிறார்.

சையின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது.

தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து நாடு முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள பிரபாஸின் முகநூல் பக்கம் நேற்று திடீரென முடங்கியுள்ளது. நேற்று பிரபாஸின் முகநூல் பக்கத்தில் ‘Ball fails around the world’ மற்றும் ‘unlucky humans’ என்ற இரண்டு வீடியோக்கள் பதிவாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் குழப்பத்தில் இருக்க, இந்த நிகழ்வு குறித்து நடிகர் பிரபாஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பதிவில்,"என் பேஸ்புக் பக்கம் முடங்கியுள்ளது. இந்த பிரச்சனை குழுவினால் சரி செய்யப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த செய்தி இணையத்தில் ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் பிரபாஸின் முகநூல் பக்கத்தில் பதிவான இரண்டு வீடியோக்களையும் பிரபாஸின் டிஜிட்டல் குழு நீக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் நடிகர் பிரபாஸ் அவருடைய சமூக வலை தள கணக்குகளை சக கலைஞர்களில் பிறந்த நாள் வாழ்த்துகளுக்கும் திரைப்படத்தின் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தி வருவார். பெரிதளவு சமூக வலை தள பக்கங்களில் நாட்டம் இல்லாத பிரபாஸின் கணக்கு முடங்கியது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.