தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சீயான் விக்ரம் முதல் முறையாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது இதனையடுத்து உடனடியாக தீவிர சிகிச்சை மேற்கொண்டட்சியான விக்ரம் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் தங்கலான் திரைப்படத்தை PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இதுவரை ரசிகர்கள் பார்த்ததாக முற்றிலும் வேறு விதமான மிரள வைக்கும் சினிமா அனுபவத்தை தங்கலான் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக சிஎம் விக்ரமின் பிறந்தநாள் அன்று வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் சிறப்பு காட்சியை காண வந்த இயக்குனர் பா.ரஞ்சித் படம் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, தங்கலான் திரைப்படத்தின் முக்கியமான ஷூட்டிங் அப்டேட்டையும் காயமடைந்த சீயான் விக்ரமின் உடல்நிலை குறித்தும் பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில்,

“தங்கலான் என்னும் ஒரு இருபது நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அந்தப் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டால் படத்தின் ரிலீஸ் ஆன அடுத்த கட்ட வேலைகள் தொடங்கிவிடும்" என தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களிடம் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சியான் விக்ரம் அவர்களுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து கேட்டபோது, "அது பற்றி இப்போது எதுவும் பேச முடியாது அவருக்கு அடிபட்டுவிட்டது ஆனால் அது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கவில்லை அந்த அடிப்பட்டதற்காக இப்போது அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் சீக்கிரம் குணமடைந்த உடன் படம் உடனே தொடங்கி விடும்” என பதிலளித்துள்ளார். எனவே வெகு விரைவில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த 20 நாட்களுக்குள் நிறைவடையும் பட்சத்தில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீயான் விக்ரம் அவர்களுக்கு அடிபட்டது குறித்தும் தங்கலான் படத்தின் ஷூட்டிங் குறித்தும் இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய வீடியோ இதோ...