இறுதிச்சுற்று மற்றும் ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரித்திகா சிங் தற்போது கராத்தேவில் அசத்தி வருகிறார். கலப்பு தற்காப்பு கலைஞராக ஆரம்ப கட்டத்தில் தனது பயணத்தை தொடங்கிய ரித்திகா சிங் புகழ்பெற்ற சூப்பர் ஃபைட் லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றவர். அதன் பிறகு தனது பயணத்தை நடிப்பின் பக்கம் திருப்பிய ரித்திகா சிங் தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்த நடிகை ரித்திகா சிங்கின் நடிப்பு அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் இந்த இறுதி சுற்று திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் மூன்று மொழிகளுக்குமான ஃபிலிம் சார் விருதுகளையும் வென்று இருக்கிறார். அதேபோல் இறுதி சுற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சிவலிங்கா மற்றும் தெலுங்கில் நடிகர் ஆதி நடிப்பில் வெளிவந்த நீவெவரோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரித்திகா சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் அனு பால்ராஜ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். கொரோனாவால் இந்தியா முதல் முறை லாக் டவுனுக்குள் செல்வதற்கு முன் கடைசியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய முக்கிய திரைப்படம் ஓ மை கடவுளே. முன்னதாக பாலிவுட்டில் நடிகை ரித்திகா சிங் நடிப்பில் ரோடு கிரைம் திரில்லர் படமாக தயாரான இன் கார் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த 2023 மார்ச் மாதம் வெளியானது.

அடுத்ததாக வருகிற ஓணம் பண்டிகை வெளியீடாக ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாக இருக்கும் துல்கர் சல்மானின் கேங்ஸ்டர் திரைப்படமான கிங் ஆஃப் கொத்தா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கும் நடிகை ரித்திகா சிங் அடுத்த சில தினங்களில் ரிலீஸாக இருக்கும் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். விடியும் முன் திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் பக்கா கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த கொலை திரைப்படம் வருகிற ஜூலை 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக KSI கராத்தே சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டுள்ள நடிகை ரித்திகா சிங் கராத்தேவில் தனது பிளாக் பெல்ட்க்கான மூன்றாவது டான் கிரேடிங் தேர்வை நிறைவு செய்திருப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார். ஏற்கனவே கொலை திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்வதாகவும் தெரிவித்திருந்த நடிகை ரித்திகா சிங் தற்போது தன் தந்தையுடன் கராத்தே பிளாக் பெல்ட் முக்கிய தேர்வு முடித்திருப்பதாக அறிவித்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகை ரித்திகா சிங்கின் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.