பிறந்த சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தை சுடுகாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்கொரை கிராமத்தின் எல்லையில், அந்த ஊருக்கான சுடுகாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த சுடுகாட்டை அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கடந்து செல்லும்போது, புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது, இருவரும் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்த சில மணி நேரமேயான ஆண் குழந்தை ஒன்று, புதரில் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, குழந்தையை மீட்ட அந்த பெண்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்குக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தையைப் புதரில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தையைச் சுடுகாட்டில் வீசிச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.