கள்ளக்குறிச்சியில் திருமணமான ஏழாவது நாளில் புதுமணப் பெண் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கும், சங்கராபுரம் வட்டம் செம்படாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கோயிலுக்குப் போவதாக, பிரியதர்ஷினியின் அண்ணன் சந்தோஷ், பால முருகனையும், பிரியதர்ஷினியையும் தனது இருசக்கர வானத்தில் கள்ளக்குறிச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம், சந்தோஷ் ஓட்டிவந்த வாகனம் மீது மோதியுள்ளது. இதில், நிலைதடுமாறி பாலமுருகனும், பிரியதர்ஷினி கீழே விழுந்தனர். அப்போது, மின்னல் வேகத்தில் எதிரே வந்த அரசுப் பேருந்தின் சக்கரத்தில் பிரியதர்ஷினியின் தலை சிக்கி, கணவரின் கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து விரைந்து வந்த போலீசார், பிரியதர்ஷினியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.