பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் சரவணனை ஊர்மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகில் உள்ள எஸ்.உடுப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கடந்த 4 ஆண்டுகளாகச் சரவணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும், இதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாகப் பேசப்படுகிறது.

இருவருக்குள்ளும் தகாத உறவு அதிகரித்த நிலையில், இருவரும் காமத்தை அடக்க முடியாமல், பள்ளியில் உள்ள கழிவறையிலேயே அடிக்கடி தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள், வீட்டில் சென்று தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் பலர், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆசிரியர் சரவணன் மற்றும் பெண் சத்துணவு அமைப்பாளர் ஆகிய இருவரையும் அழைத்து தலைமை ஆசிரியர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத ஆசிரியர் சரவணன், பெண் சத்துணவு அமைப்பாளருடன் மீண்டும் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட முயன்றதாகத் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் ஒன்று சேர்ந்து, பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சரவணனுக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும், சரவணனைப் பள்ளிக்கு வெளியே சட்டையைப் பிடித்து இழுத்து வந்து மீண்டும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன், சரவணனைத் தாக்கிய 10 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, பள்ளி வளாகத்தில் ஆசிரியர், சக ஊழியருடன் தகாத உறவில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.