கணவனை ஆள் வைத்துக் கொன்ற மனைவி போலீசில் சரணடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் - செல்விக்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மதுவுக்கு அடிமையான வெங்கடேசன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், விசைத்தறி வேலைக்குச் செல்லும் செல்வி, அங்கு தன்னுடன் வேலை செய்யும் குமாரபாளையம் காவேரி நகரைச் சேர்ந்த பெருமாளிடம் நட்பாகப் பழகி வந்த நிலையில், தனக்கு தன் கணவரால் நேரும் துன்பங்களைச் சொல்லிப் புலம்பி உள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பெருமாள், வெங்கடேசை குடிப்பதற்குத் தனியாக அழைத்துச் சென்று, அவருக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்துக் குடிக்க வைத்துள்ளார். இதில், வெங்கடேசன் போதையின் உச்சத்திற்கே சென்றதும், காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து, பெருமாள் அவரை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து யாருக்கும் எதுவும் சொல்லாமல் இருக்க, செல்வியைப் பலமுறை மிரட்டியே, பெருமாள் தகாத உறவில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட செல்வி, இன்று காவல் நிலையத்திற்குச் சென்று, தன்னுடைய கணவரை, தான் சொல்லி பெருமாள் கொலை செய்ததாகக் கூறி, சரணடைந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்வியைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெருமாளைத் தேடி வருகின்றனர். இதனிடையே மனைவியே, கணவனை ஆள் வைத்துக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.