தென்னிந்திய சினிமாவின் ஃபேவரட் செலிபிரிட்டி ஜோடியாக வலம் வந்த நாக சைதன்யா - சமந்தா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். அதிகாரப்பூர்வமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டு கிட்டதட்ட ஓராண்டு கழிந்து விட்டது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் நாக சைதன்யா தனது முன்னாள் காதல் மனைவி சமந்தா குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார். அந்த வகையில், நாக சைதன்யா நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் கஸ்டடி. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நாக சைதன்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தனது திரைப் பயணத்தின் 11வது திரைப்படமாக முதல் முறை தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் தயாராகி இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை மே 12ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ள கஸ்டடி திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கஸ்டடி திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தொடர்ந்து பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், கொஞ்சம் சீரியசான திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த கஸ்டடி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்குக் காரணம் கஸ்டடி திரைப்படத்தின் கதையை ஏற்கனவே வெங்கட் பிரபு ரசிகர்களிடம் தெரிவித்துவிட்டார். வழக்கமாக வில்லனை ஹீரோ அழிப்பதே மூலக்கதையாக பல படங்களில் இருக்கும் ஆனால் கஷ்டடி படத்தில் வில்லனை கடைசிவரை சாகவிடாமல் பார்த்துக் கொள்வதே ஹீரோவின் முக்கிய கடமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 48 மணி நேரத்தில் நடைபெறும் ஒரு கதைக்களத்தை மையமாக வைத்து வித்தியாசமான போலீஸ் படமாக தயாராகி இருக்கும் விறுவிறுப்பான கஷ்டடி திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தனது முன்னாள் காதல் மனைவி சமந்தா குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் நாக சைதன்யா, “சமந்தா மிகவும் அற்புதமான ஒரு நபர்… எல்லா சந்தோஷங்களுக்கும் தகுதியானவர்.” என தெரிவித்துள்ளார். மேலும் “ஊடகங்களில் எங்களைப் பற்றி யூகங்களின் அடிப்படையில் வரும் செய்திகளால் தான் எங்களுக்குள் சங்கடங்கள் ஏற்படுகிறது.” எனவும் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட விவாகரத்து பெற்று ஓராண்டு கழிந்த பிறகும் தனது காதல் மனைவி சமந்தா குறித்து பேசிய ஒவ்வொரு சமயங்களிலும் நாக சைதன்யா நல்ல விதமாகவே பேசி வருகிறார். இதனிடையே சமீபகாலமாக நடிகர் நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சோபிதா துல்லிபலா உடன் காதலில் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.