ரசிகர்கள் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருக்கும் பிசாசு 2 திரைப்படம் குறித்தும் அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைய இருக்கும் புதிய திரைப்படம் குறித்தும் இயக்குனர் மிஷ்கின் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் கதை நாயகனாக நடித்த சைக்கோ தொழிலர் படமாக வெளிவந்த சைக்கோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது நடிகராகவும் முக்கியமான படங்களில் இயக்குனர் மிஷ்கின் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்க அதிரடி ஆக்சன் திரைப்படமாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துவரும் மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள பிசாசு 2 படத்திற்கு கீர்த்தனா மற்றும் சுசில் உமாபதி ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியிடாக பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியிட தயாராக இருக்கும் பிசாசு 2 படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தற்போது அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் சிறப்பு பிரிமியர் காட்சியை பார்த்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஷ்கின், பிசாசு 2 திரைப்படம் குறித்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு மீண்டும் இணைவது குறித்தும் பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில்,

“பிசாசு 2 வந்துவிடும் தயாரிப்பாளர் ஒரு சிறிய பிரச்சனையில் இருக்கிறார் விரைவில் வந்து விடும் என நினைக்கிறேன் நல்ல படம் நன்றாக வந்திருக்கிறது எல்லாருக்குமே பிடிக்கும் பார்க்கலாம்" என பதில் அளித்தார் தொடர்ந்து பேசிய போது, "தாணு சாருக்கு படம் பண்ணுகிறேன் விஜய் சேதுபதியுடன் பண்ணுகிறேன் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் கதை எழுதி முடித்தவுடன் சொல்கிறேன்.” என தெரிவித்துள்ளார். எனவே மூன்று வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வரிசையாக திரைப்படங்கள் வர இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இயக்குனர் மிஷ்கின் பேசிய அந்த வீடியோ இதோ…