திருமணம் செய்ய இருந்த பெண்ணை காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த விஜய்குமார் என்பவர், மும்பையில் தங்கி பணியாற்றி வருகிறார். அங்கு, மும்பை ரேரோடு தாருகானா பகுதியைச் சேர்ந்த 22 வயதான சந்தியா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் சில வருடங்களாக நெருங்கிப் பழகி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இந்நிலையில், தனியாகப் பேச வேண்டும் என்று கூறி சந்தியாவை, அங்குள்ள கோலிபர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு விஜய்குமார் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அறையினுள் சென்று வெகு நேரமாகியும், அறையின் கதவு திறக்கப்படாததைக் கண்டு, ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, மற்றொரு சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே பார்த்துள்ளனர்.

அங்கு, சந்தியா உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப்பார்த்த அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விரைந்த வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், தலைமறைவான காதலனைத் தேடி வந்தனர்.

இதனிடையே, சிவ்ரி பகுதியில் காதலன் விஜயகுமார், லாரி முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், காதலியைத் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில், அவர் மீது சந்தேகம் எழுந்ததாகவும், இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டபோது, அவர் பதிலில் திருப்தியில்லாமல், ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கொலை செய்யப்படுவதற்கு முன்பு சந்தியா பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகச் சந்தியா உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.