'ஐட்டம்' என்று ஆபாசமாகக் கிண்டல் செய்த இளைஞரை இளம் பெண் ஒருவர் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.

மும்பை விலே பார்லே பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், அங்குள்ள விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வேலையை முடித்துவிட்டு இரவு அவர் வீடு திரும்பும்போது, பேருந்துக்காகக் காத்திருந்தார்.

அப்போது, அங்குக் குடிபோதையில் தினேஷ் என்ற இளைஞர், அந்த இளம் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி கிண்டல் அடித்துள்ளார். மேலும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளைப் பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பும் முன்பு, அந்த இளம் பெண்ணை அவர் 'ஐட்டம்' என்று கூறியதாகத் தெரிகிறது.

இதனால், கடும் கோபமடைந்த பெண், அந்த இளைஞரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அந்த இளைஞரின் வீடு வரை விட்டிச் சென்ற அந்த பெண், தனது கணவருக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் வந்த பிறகு, அந்த இளைஞனை மடிக்கப்பிடித்த அவர்கள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்,அந்த இளைஞனைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.