மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உட்பட 4 பேர் தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் மும்பைக்குள், கடல் வழியாக வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அவர்கள், நடத்திய கொலை வெறி தாக்குதலில், 166 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்க அரசால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

மேலும், மும்பை குண்டு வெடிப்புக்குச் சதித் திட்டம் தீட்டியவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் என்று பேசப்பட்டு வந்தன. இந்நிலையில், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயீத், மசூத் அசார், ஷக்கி ரஹ்மான் லக்வி ஆகியோரை பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.