கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் வலம் வந்த மகேந்திர சிங் தோனி அவர்கள் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறாத மகேந்திர சிங் தோனி தற்போது ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வழி நடத்துகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராகவும் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் ஃபேவரட் கிரிக்கெட்டராகவும் திகழ்ந்த கேப்டன் COOL மகேந்திர சிங் தோனி அவர்கள், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலக அளவில் திரை பிரபலங்களுக்கு சமமாக அதிக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது என்பதற்கு ஏற்றார் போல் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

அடுத்த சில ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து MSதோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மகேந்திர சிங் தோனி அவர்கள் தற்போது இந்திய திரையுலகில் தயாரிப்பாளராக களமிறங்குகிறார். தனது தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தோனியின் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. நாளை ஜனவரி 26 ஆம் தேதி காலை 12 மணியளவில் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர் நடிகைகளின் அறிவிப்பு வெளியாகும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.