தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றும் ஸ்லாகித்து பேசக் கூடிய திரைப்படமாக இருந்து வருவது ‘மௌன குரு’ கடந்த 2011 ல் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் திரைக்கதை மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து சிறந்த படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மௌன குரு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில் கடந்த 2019ல் வெளியான திரைப்படம் ‘மகாமுனி’. நடிகர் ஆர்யா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் அனைத்து வகையான ரசிகர்களின் வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இன்றும் பல உலக அரங்குகளில் விருதுகளை குவித்து வருகிறது மகாமுனி திரைப்படம். ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கருத்தையும் ஆழமான சிந்தனையையும் ரசிகர்களுக்கு கொடுக்கும் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

கைதி படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இன்று கதாநயாகனாக பல நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் அர்ஜுன் தாஸ் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார்.மேலும் இவர்களுடன் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடிக்கின்றனர். கிரைம் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘ரசவாதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு முதல் பார்வையுடன் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

DNA மெக்கானிக் கம்பெனி மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சரண் இளவரசு ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் எஸ் தமன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

முன்னதாக படத்திற்கு ரசவாதி (The alchemist) என்று தலைப்பு வைத்தது பிரேசில் எழுத்தாளர் பவுலோ கோய்லா எழுதிய ரசவாதி நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது என தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் சாந்தகுமார் தரப்பில் இருந்து இது முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மௌன குரு, மகாமுனி போன்ற கிளாசிக் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பாக உருவாகும் ரசவாதி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அநீதி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் தற்போது தொடர்ந்து தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து ஹீரோவாக அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.