தென்னிந்தியா ரசிகர்களினால் காலத்திலும் மறக்க முடியாத திரைப்படமாக இருந்து வருவது சந்திரமுகி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாறுபட்ட கதைகளத்தில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்ட திரைப்படம் சந்திரமுகி. கடந்த 2005 ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி திரைப்படம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருட கணக்கில் திரையரங்குகளில் ஓடி மிகபெரிய வசூலையும் வரவேற்பையும் பெற்றது. காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி வருகிறது.

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர்களுடன் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். மிரட்டலான ஹாரர் கதையுடன் கலகலப்பான நிகழ்வுடன் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஆஸ்கர் விருது வென்ற MM கீரவாணி படத்திற்கு இசையமைத்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சந்திரமுகி 2 படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு..

முன்னதாக ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கும் வேட்டைய ராஜா கதாபாத்திரம் வெளியாகி வைரலானது குறிப்பிடதக்கது. தற்போது வெளியான சந்திரமுகி 2 படத்தின் முதல் பார்வை ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகிற விநாயகர் சதூர்த்தி வெளியீடாக செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், இந்திய திரையுலகில் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவர். இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர். முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வரும் இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தற்போது கவனம் பெற்று வருகிறார். இவரது இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘எமர்ஜன்ஸி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இந்திரா காந்தியாக தானே நடித்து உள்ளார் நடிகை கங்கனா ரனாவத். மேலும் தமிழில் ‘தாம் தூம்’, ‘தலைவி’ படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக உருவாகும் சந்திரமுகி 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.