தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கி பல ஹிட் திரைப்படங்களில் பணியாற்றி முன்னணி இசையமைப்பாளராக கவனம் ஈர்த்த விஜய் ஆண்டனி. ஹீரோவாக களமிறங்கி குடும்பங்கள் கொண்டாடும் நல்ல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார், அதன்படி நான், சலீம், பிச்சைக்காரன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் தற்போது விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி அக்னி சிறகுகள், வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் என பல முக்கிய திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் மக்களின் வரவேற்பை பெற்ற விஜய் ஆண்டனி. இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் திரையுலகில் அறிமுகமானார். ரசிகர்களின் எதிர்பார்ப்பில் கடந்த மே 19ம் தேதி வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. நேர்மறையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்தது. விஜய் ஆண்டனி திரைபயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக தற்போது பிச்சைக்காரன் 2 அமைந்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியையடுத்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கொலை’.

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலையை மையப்படுத்தி உருவான திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத் குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜயன் ஒளிப்பதிவு செய்ய கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

ஒரு கொலை சுற்றி நிகழும் மர்மங்களை துப்பறியும் அதிகாரியாக வரும் விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் இறுதியில் அந்த கொலையை யார் செய்தார்கள் என்று திரைக்கதை அமைந்திருக்கும் கொலை படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பின் மத்தியில் இருந்த கொலை திரைப்படம் வரும் ஜூலை 21ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் தற்போது விஜய் ஆண்டனிக்கு தெலுங்கு திரையுலகிலும் மவுசு பெருகியதால் பிச்சைக்காரன் 2 படத்தை தொடர்ந்து கொலை படத்தையும் தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட படக்குழு முன் வந்துள்ளது. இந்நிலையில் கொலை படத்தில் இடம் பெற்ற முதல் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்பாடலுக்கு இசையமைத்து வரிகள் எழுதியுள்ளார். பின்னணி பாடகர்கள் எம் எஸ் கிருஷ்ணா, அஞ்சனா ராஜகோபாலன் உடன் இணைந்து கபர் வாசுகி இப்பாடலை பாடியுள்ளனர். வித்யாசமான உணர்வை கொடுக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிச்சைக்காரன் 2 படத்தின் விளம்பரத்திற்காக பம்பரமாய் சுற்றி தன் சிகிச்சை காலத்தின் போதே பல வேலைகள் செய்த விஜய் ஆண்டனி தற்போது கொலை படத்திற்கும் மும்முரம் காட்டி வருகிறார். நிச்சயம் விஜய் ஆண்டனிக்கு இந்த ஆண்டு மற்றுமொரு வெற்றி திரைப்படமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.