கடந்த 2018ல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்’. கன்னட திரையுலகில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் இந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கன்னட மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படத்திற்கான வரவேற்பு கிடைத்தது. படத்தின் நாயகன் நடிகர் யாஷ் இப்படத்திற்கு பின் பான் இந்திய ஸ்டாராக மாறி இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.

ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் இந்த முறை மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. முதல் படத்தை விட வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இமாலய வெற்றியடைந்தது. கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி கன்னட திரையுலகின் மணிமகுடமாக கேஜிஎஃப் திரைப்படம் இருந்து வருகிறது. இதையடுத்து ‘கேஜிஎஃப் 3’ படத்தை உருவாக்குவதாக படக்குழு அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது. அதற்கான வேலைகளும் விரைவில் இயக்குனர் பிரசாந்த் நீல் துவங்குவார் என்று அறிவிப்பு வெளியானது.

இதனிடையே பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் கூட்டணியில் மீண்டும் ஒருமுறை இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘சலார்’. இரண்டு இமாலய வசூல் பெற்ற திரைப்படத்திற்கு பின் இந்த கூட்டணி இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. அதன்படி விறுவிறுப்பாக சலார் திரைப்படம் உருவானது. பிரபாஸ் ஹீரோவாக நடிக்க மேலும் மலையாள நடிகர் பிரித்வி ராஜ் மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்ய உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்கிறார் மேலும் சலார் படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்பை கொண்டிருக்கும் சலார் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று அதிகாலை 5.12 மணியளவில் வெளியிட்டுள்ளனர். கேஜிஎஃப் பாணியில் ஹீரோ பில்டப் காட்சிகளும் துப்பாக்கி, கத்தி, ரத்தம் என்று பல ஆக்ஷன் நிறைந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் டீசரில் “புலி, சிங்கம், யானை எல்லாம் ஆபத்தானவை. ஆனால் ஜூராசிக் பார்க்கில் அப்படி கிடையாது..ஆனால் அந்த பார்க்கில் ஒருவன் இருக்கிறார் ‘சலார்’” என்று அட்டகாசமான மாஸ் பில்டப் வசனத்தையும் சேர்த்துள்ளனர். தற்போது சலார் பட டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.

பாகுபலிக்கு பின் அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் படியான திரைப்படம் பிரபாஸிற்கு அமையவில்லை. சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படமும் பிரபாஸிற்கு முழுமையான வெற்றியை கொடுக்க வில்லை. நிச்சயம் சலார் திரைப்படம் பிரபாஸின் பான் இந்திய வெற்றியை மீண்டும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதையடுத்து பிரபாஸ் தற்போது மற்றுமொரு பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். இந்தி மற்றும் தெலுங்கில் Sci Fi திரைப்படமாக உருவாகும் ‘புரோஜக்ட் கே’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து உலகநாயகன் கமல் ஹாசன், பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.