ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்திற்கு கலை இயக்குனர் தோட்டா தரணி கலை இயக்கம் செய்ய படத்திற்கு ஒளிப்பதிவு செய்யதுள்ளார் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர். மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களுக்கு இசையமைத்து ஆஸ்கர் விருது வென்ற எம் எம் கீரவாணி படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் நடித்த ராகவா லாரன்ஸ் அவர்களின் வேட்டைய ராஜா கதாபாத்திரம் மற்றும் கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

விறுவிறுப்பாக சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. மேலும் சில இணைப்பு காட்சிகள் மீதம் இருப்பதால் தற்போது குறிப்பிட்ட நடிகர்களுடன் படக்குழு சமீபத்தில் ஜார்ஜியா செண்டிருன்தனர். அட்டகாசமான காமெடி கதைகளத்தில் ஹாரர் திரைப்படமாக உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உலகளவில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சந்திரமுகி 2 பட இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி 2 பட வேலை குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வெற்றிகரமாக சந்திரமுகி 2 படத்தின் ‘சந்திர’ விற்கு பின்னணி இசை முடித்து விட்டேன். இன்று ‘முகி’ க்கு இசையமைக்கவுள்ளேன்..” என்று அவர் ஸ்டைலில் முதல் பாதி நிறைவடைந்ததை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதையடுத்து இணையத்தில் அவரது பதிவு ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வைரலாகி வருகிறது.