தனது முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த இயக்குனர் மாதிரி செல்வராஜ், அடுத்த படத்தில் நடிகர் தனுஷுடன் கை கொடுத்தார். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த கர்ணன் திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் 50 சதவீத இருக்கைகளோடு அனுமதிக்கப்பட்ட சமயத்தில் வெளிவந்தும் வசூல் ரீதியில் 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. வியாபார ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது கர்ணன்.

அடுத்ததாக தற்போது நான்கு சிறுவர்கள் மற்றும் கலையரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாழை திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட வாழை படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபகத் பாஸில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் வரும் மே 12ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்னும் ஓரிரு தினங்களில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் அனைத்தந்திய தனுஷ் நண்பர்கள் மன்றம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த முக்கிய செயல்பாட்டினை தொடங்கி வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் "தற்போது முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களோடு இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் பணியாற்றுகிறீர்கள் அது பற்றி..." என கேட்டபோது,

"ஏ.ஆர்.ரஹ்மான் சார் என்ன சொல்வது... ரொம்ப நாள் ஆசை எல்லோருக்கும் ஆசை இருக்கும் அல்லவா? ராஜா சார் உடன் பணியாற்ற வேண்டும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் பணியாற்ற வேண்டும் என, அது இந்த படத்தில் எனக்கு அமைந்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஏனென்றால், ஏ.ஆர்.ரஹ்மான் சார் மாதிரி ஒருவர் நம்முடைய படத்தை நம்முடைய அரசியலை நம்முடைய விஷயங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவாக பேசுவது உடன் பயணிப்பது எல்லாமே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் நான் மிகவும் பயந்து கொண்டு இருந்தேன். எப்படி புரிந்து கொள்வார்? எப்படி அனைத்தையும் எடுத்துக் கொள்வார் என்று, ஆனால் ரொம்பவே ஃப்ரெண்ட்லியாக கையாளுகிறார். நிச்சயமாக தொடர்ந்து அவரோடு பயணிக்க வேண்டும்.” என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் அந்த முழு பேட்டி இதோ…