பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் தொடங்கி கர்ணன் திரைப்படத்தின் வழியாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த அட்டகாசமான படைப்பாக மாமன்னன் திரைப்படம் இன்று ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மாமன்னன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற மாரி செல்வராஜ் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் நம்மோடு பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் அவர்களுடன் பிறந்த அண்ணன் திரு.சிவனனைந்த பெருமாள் அவர்கள் காணொளி வாயிலாக பேசியபோது மிகவும் எமோஷ்னலான மாரி செல்வராஜ் கண்கலங்கினார். மாரி செல்வராஜ் அவர்களோடு சிறுவயதில் வாழ்ந்த நினைவுகள் குறித்தும், தற்போது இயக்குனராக வெற்றி பெற்றது குறித்தும், மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்தும் தனது அண்ணன் பேசிய அந்த காணொளியை தொடர்ந்து கண் கலங்கியபடியே பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்,

“நான் ரொம்ப வருஷம் கழித்து இப்போது தான் அவரைப் பார்க்கிறேன் நன்றி கலாட்டா... ஒரு 14 வருட பிரிவு இது.. எங்கள் இருவருக்கும் எனக்குள் சினிமா என்ற ஒரு வடிவத்தையும் கலையையும் விதைத்தது இவர்தான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அண்ணன் இங்கே சென்னையில் தான் வேலை பார்க்கிறார். எப்போதாவது எனக்கு பார்க்க வேண்டும் என தோன்றியது என்றால் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்தின் முன்னால் நிற்பேன்.. அப்படி தான் பார்த்திருக்கிறேன்.. ஒரு பெரிய அன்பு எங்கள் இருவருக்கும் இருக்கிறது, அது எப்போதாவது ஒருநாள் நடக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்குள்ளே இருக்கும் எல்லா கலை வடிவமும் எல்லா சிந்தனைகளையும் அதற்கு செயல் வடிவம் கொடுத்தது அதற்கெல்லாம் மூல காரணம் இவர்தான். எனக்கு ஆப்பிள் பழம் வாங்கி கொடுத்த முதல் அண்ணன் எனக்கு ஆனந்த விகடன் வாங்கி கொடுத்த முதல் அண்ணன் எல்லாவற்றையும் முதலில் அறிமுகப்படுத்தியது இவர்தான். எங்கள் இருவருக்கு இடையிலான முரண்… நாங்கள் இருவரும் பிரிவதற்கு வாழ்வியல் சார்ந்து சில விஷயங்கள் நடந்தது. அதில் என்னுடைய தவறுகள் நிறைய இருந்தது. என்னுடைய சுதந்திரமான போக்கு அண்ணனுக்கு உண்டான கோபங்கள் அது எல்லாமே ஒரு கட்டத்தில் பிரித்துவிட்டது. ஆனால் மீண்டும் ஒரு கட்டத்தில் நாம் வளர்ந்த பிறகு அவரை சந்திக்கும் போது அவரை எப்படி கையாள்வது என்பது தெரியாது என்னை அதிகமாக ஒழுங்கு படுத்தியதும் முக்கியமாக இவர் தான். அவர் என்னுடைய ஆசிரியர் எங்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 15 வயது இருக்கும். என்னை வளர்த்ததே அவர்தான். இப்போது வரைக்கும் அவர் மீது எனக்கு பயம் தான். அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அவரைப் பற்றி நான் பேசாமல் இருக்கிறேன் என்று.. உண்மையில் எனக்கு பயம். அந்த பயத்தின் அடிப்படையிலேயே நான் விலகி இருந்தேன். அந்த பயமும் ஒரு பேரன்பும் தான் காரணம். ஒரு வார்த்தை பேசினாலும் நான் பயந்து பயந்து தான் பேசுவேன் அவ்வளவு மரியாதைக்குரியவர்.” என பேசி இருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜின் அந்த முழு பேட்டி இதோ...