தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் மன்சூர் அலிகான். தனது திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் வில்லனாக மிரட்டிய மன்சூர் அலிகான் அவர்கள் தொடர்ந்து குணசத்திர வேடங்களிலும் நகைச்சுவையான கதாபாத்திரங்களிலும் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கென தனி பாணியில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சமீபத்தில் விஜய் ஆண்டனி அவர்கள் இயக்கி நடித்து வெளிவந்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார்.

முன்னதாக கைதி திரைப்படத்தின் கதை களமே நடிகர் மன்சூர் அலிகான் அவர்களை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தெரிவித்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் அவர்களை நடிக்க வைத்திருக்கிறார். தளபதி விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரம் பிரியாணி சாப்பிடுவது போலவே லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த நா ரெடி பாடலின் ஒரு பகுதியில் மன்சூர் அலிகான் பிரியாணி சாப்பிடுவது போல் வரும் காட்சி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற மன்சூர் அலிகான் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து அட்டகாசமாக பதில் அளித்து வந்த மன்சூர் அலிகான் அவர்களிடம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் குறித்து கேட்டபோது, “கடவுள் அவருக்கு இன்னும் நல்ல ஆயுளை கொடுக்க வேண்டும். உண்மையிலேயே தங்கமான மாமனிதர். அவருடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது அவருடைய கால்கள் ஒவ்வொன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தூண்கள் மாதிரி வலிமையானது. அரிசி மூட்டை நெல் மூட்டை எல்லாம் தூக்கி தூக்கி வேலை செய்து, என்னிடம் சொல்வார், “இவ்வளவு மூட்டைகள் தினமும் தூக்குவேன்” என சொல்வார் அவ்வளவு வலிமையானவர். இப்போது சந்திக்கும் போது தளர்ந்து போய் இருப்பதை பார்க்கும் போது அழுகையாக வந்தது நிறைய பேருக்கு சாப்பாடு போட்டு வாழ வைத்த மனிதர் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் ஒளிப்பதிவாளர்கள் நடிகர்கள் வர காரணமாக இருந்தவர். இந்தப் பாழாய் போன அரசியலால் இப்படி ஆகிவிட்டார். ரொம்ப சந்தோஷமாக இருக்கும் மனிதர் இப்போது உடம்பு முடியாமல் இப்படி இருப்பது ரொம்ப கொடுமை" என தெரிவித்தார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.