இந்தியத் திரையுலகையே வியந்து பார்க்க வைத்த பிரம்மிப்பான படைப்பாக கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்தது இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம். மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புதப் படைப்பாக திகழும் வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து பணியாற்றிய திரைக்கதை வசனத்தில் பிரம்மாண்டமாக தயாரான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையமைத்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர்.

இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம், பொன்னியின் செல்வன் பாகம் 1-ஐ விட மிகப் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இன்று மார்ச் 2ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரை பயணத்தில் 170-வது திரைப்படமாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே லைகா ப்ரோடக்ஷன் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கௌரவ வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்த படமாக லைகா தயாரிப்பில் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்களின் பிறந்த நாளான இன்று மார்ச் 2ம் தேதி தலைவர் 170 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டது. அட்டகாசமான அந்த போஸ்டர் இதோ…