தென்னிந்தியாவின் குழந்தை நட்சத்திரமாக பல ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷாமிலி. நடிகர் அஜித் குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினியின் தங்கையுமான இவர் தமிழ் சினிமாவில் ‘ராஜ நடை’ படத்தின் மூலம் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவு பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து ‘ஒய்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக சித்தார்திற்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீர சிவாஜி’ என்ற படத்தில் நடித்தார் நடிகை ஷாமிலி .

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் வளர்ந்த பின் நடிப்பதில் இருந்து விலகினார். அதன்பின் தனக்கென தனி பாதையில் செல்ல தொடங்கியுள்ளார். அதன்படி ஷாமிலி ஓவியம் வரைவதில் முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வந்தார். பிரபல ஓவியர் ஏவி இளங்கோவன் அவரிடம் முறைப்படி ஓவிய நுணுக்கங்களை கற்று வந்தார். ஓவிய துறையில் நாட்டம் அதிகமாக அதிலே தனது முழு கவனம் செலுத்தி ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.

இவரது ஓவிய படைப்புகள் முன்னதாக துபாயில் வேர்ல்ட் ஆர்ட் துபாய் எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் வைக்கப்பட்டது. 60 நாடுகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கலைஞர்களில் ஒருவராக நடிகை ஷாமிலி கலந்து கொண்டார். இதனையடுத்து அவரது வண்ணமயமான தனித்துவமான ஓவியங்களுக்கு பாராட்டுகள் பெற்று கவனம் பெற தொடங்கியது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை போக்கஸ் ஆர்ட் கேலரியில் தற்போது ஷாமிலி தனது ஓவியங்களை கண்காட்சியாக அமைத்துள்ளார். இந்த கண்காட்சிக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், இயக்குனர்கள் மணிரத்னம், கிரித்திகா உதயநிதி, விஷ்ணு வரதன், கலை இயக்குனர் தோட்டா தரணி நடிகர்கள் மிர்ச்சி சிவா, அர்ஜுன், சுஹாசினி, ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுடன் நடிகை ஷாலினி அவரது மகன், மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஓவியங்களை கண்டு களித்து ஷாமிலியை பாரட்டியுள்ளனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது.