குடிக்கப் பணம் தர மறுத்த தயாரை மகன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஹரிதாஸ் - சந்தி தம்பதியினருக்கு குமரவேல் என்ற மகன் இருக்கிறார். இவருக்குத் திருமணம் ஆகி ஒரு கைக் குழந்தையும் இருக்கிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான குமரவேல், குடிக்கப் பணம் கேட்டு அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி குளிக்கச் சென்ற தாயை பின் தொடர்ந்து சென்ற குமரவேல், குடிக்கப் பணம் கேட்டு பாத்ரூமில் உள்ள அறையில் தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது, சாந்தி கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை காப்பாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவத்தன்று குமரவேலுவின் மனைவியும், தந்தையும் வெளியூர் சென்ற நிலையில், வீட்டில் தாயார் சாந்தியும், குமரவேலு மட்டுமே இருந்துள்ளனர்.

அப்போது, குமரவேல் அவரிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதில், அவர் பணம் தர மறுக்கவே, அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி அடித்தே கொன்றுள்ளார். இதில், சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து. வீட்டில் உள்ள ஒரு ரூமில் அவரை பூட்டிவிட்டு, சாவியை மறைத்து உள்ளார்.

இதனையடுத்து, அன்று மாலை வீடு திரும்பிய குமரவேலுவின் மனைவி, மாமியாரைக் காணவில்லை என்று தேடி உள்ளார். அப்போது, வீட்டின் ஒரு ரூம் மட்டும் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து, அவர்கள் முன்னிலையில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, சாந்தி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனிடைய, குமரவேல் தலைமறைவானார்.

கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து குமரவேலுவைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, குடி போதைக்கு அடிமையாகிப் பெற்ற தாயையே, மகன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.