தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்து வரும் நடிகை மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர், தனுஷின் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சீயான் விக்ரமுடன் முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இணைந்த தங்கலான் திரைப்படத்திலும் மாளவிகா மோகனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பக்கா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் தங்கலான் பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். விறுவிறுப்பாக மதுரையில் நடைபெற்ற தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 4ம் தேதி நிறைவடைந்தது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான அனுபவத்தை இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியின் தங்கலான் படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் தங்கலான் அப்டேட் கேட்டபோது, “இப்போதைக்கு என்னிடம் தங்கலான் படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை எனக்கும் அப்டேட்கள் தேவைப்படுகிறது இதை பார்த்த பிறகு இயக்குனர் ரஞ்சித் சாருக்கு நான் மெசேஜ் செய்யப் போகிறேன் நாங்கள் அனைவரும் இந்த திரைப்படத்தின் ரிலீசுக்காக மிகுந்த உற்சாகத்தோடு காத்திருக்கிறோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் அட்டகாசமாக இருந்தது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை பார்ப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை…” என பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் திரைப்படத்தின் அப்டேட்கள் அனைத்தும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில் விரைவில் ஒவ்வொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.