சீயான் விக்ரமின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படமாக உருவாக்கி வரும் தங்கலான் திரைப்படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்து இருக்கிறார். இயக்குனர் மணிரத்தினத்தின் மாபெரும் வெற்றிப்படமான பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக ரசிகர்களின் மனதை வென்ற சீயான் விக்ரம் முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களோடு இணைந்திருக்கும் திரைப்படம் தான் தங்கலான். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகும் தங்கலான் திரைப்படத்தின் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து இப்போது வரை நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

முன்னதாக தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்த நடிகர் சீயான் விக்ரம் தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்து தங்கலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிறது.

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பக்கா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் தங்கலான் பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். எனவே கட்டாயமாக இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் வேறு விதமான சினிமா அனுபவத்தை தங்கலான் படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சீயான் விக்ரம் காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு தற்போது தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடிகை பார்வதி தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்திருந்தார். தற்சமயம் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சில தினங்களில் தங்கலான் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரையில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பெரிய பாறைகள் இருக்கும் பகுதியில் நடைபெற்று வரும் தங்கலான் திரைப்படத்தின் இந்த புது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…