ஆரம்பத்திலிருந்தே நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து மக்கள் செல்வனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தனக்கென தனி பாணியை கொண்டு சிறந்த எதார்த்த நடிகராகவும் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஸ்டாராகவும் வலம் வருபவர் விஜய் சேதுபதி. கமர்ஷியல் திரைப்படங்களையும் எதார்த்த திரைப்படங்களையும் ஒரு சேர நடித்து தற்போது இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கடைசி விவசாயி, விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல், DSP ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து இந்த ஆண்டும் அதிரடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார் விஜய் சேதுபதி அதன்படி மைக்கேல், விடுதலை முதல் பாகம், பர்ஸி, மும்பைகார் வெளியானது. தற்போது விஜய் சேதுபதி இந்தியில் மெரி கிறிஸ்மஸ் என்ற படத்திலும் காந்தி டாக்கீஸ் என்ற மௌன படத்திலும் அதை தொடர்ந்து இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் ஜவான் படத்திலும் மற்றும் கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் இயக்கம் இணைய தொடரிலும் தற்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின் படி விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘VJS 50’ என்ற திரைப்படத்தை விமர்சன ரீதியாக ரசிகர்கள் கொண்டாடிய ‘குரங்கு பொம்மை’ பட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளார். பேஷன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட்ஸ் நிறுவனம் சார்பில் சுதன் சுந்தரம் , ஜெகதீஸ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தொடர்ந்து நடிகரும் ஒளிபதிவாளருமான நட்டி எனும் நடராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகியோரும் படத்தில் நடிக்கவுள்ளனர். படத்திற்கு அஜனிஷ் பி லோக் நாத் இசையமைக்க ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ் செய்ய சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார் அனல் அரசு. இது குறித்து வெளியான முதல் பார்வை தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதை தன் நடிப்பு திறமையினால் கவர்ந்து விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் முக்கிய கலைஞர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அதன்படி அவருடைய அடுத்த அடுத்த திரைப்படங்களின் அறிவிப்பும் நாடு முழுவதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுகிறது. அந்த வரிசையில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் மகாராஜா பட அறிவிப்பும் தற்போது ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது.