மதுரையில் பட்டப்பகலில் மாமனாரை மருமகன் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே நத்தம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் நல்லமணி - தனம் தம்பதியினருக்கு 10 வயதில் தென்னரசு என்ற மகனும், 5 வயதில் மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து சென்ற கணவன் நல்லமணி, ஒரு வருடமாகக் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அத்துடன், குடும்ப பிரச்சனையில் மாமனார் தங்கையா மீது, மருமகன் கடும் கோபத்திலிருந்தாக தெரிகிறது.

இந்நிலையில், சொத்து வழக்கு தொடர்பாக மதுரை மேலூர் நீதிமன்றத்தில் தங்கையா ஆஜராக வந்துள்ளார். இதைத் தெரிந்துகொண்ட நல்லமணி, மேலூர் பேருந்து நிலையத்தில் பட்ட பகலிலேயே மாமனார் தங்கய்யாவை, நல்லமணி கத்தியால் குத்திக்கொன்றுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கையா, கீழே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்து நிலையத்தில், இந்த கொடூரமான கொலையை நேரில் பார்த்த பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சிலர், துணிச்சலாக நல்லமணியை மடக்கிப் பிடித்து, சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இதனையடுத்து, போலீசார் விரைந்து வந்ததையடுத்து, அவர்களிடம் கொலையாளியை ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

நல்லமணியிடம் நடத்திய விசாரணையில், “தன்னுடன் வாழாமல் மனைவி பிரிந்து சென்றதற்கு, மாமனார் தங்கையா தான் காரணம்” என்று அவர் தெரிவித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மதுரையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.