சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் எதையோ கேட்பதுபோல், அருகில் சென்றுள்ளார். அப்போது, அது தனிமையான இடம் என்பதாலும், அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத சூழல் என்பதாலும், அந்த சிறுமியைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, கூச்சலிட்டுக்கொண்டே, அங்கிருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். இதனையடுத்து, தனக்கு நேர்ந்த அவலத்தை, தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு, மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஆட்டோ ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டு நிறுப்பிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, பாலமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.