கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் மாமன்னன் திரைப் படத்திலிருந்து கொடி பறக்குற காலம் பாடல் தற்போது வெளியானது. தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக தற்போது மாமன்னன் படம் காரணம், வைகைப்புயல் வடிவேலு அவர்களை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரம் குறித்து பேசியபோது "இது கொஞ்சம் வில்லன் மாதிரியும் இருக்கும்" என வடிவேலு அவர்கள் தெரிவித்து இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதே போல் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிப்பதால், முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாலும், மாமன்னன் தான் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பரியேறும் பெருமாள் & கர்ணன் என தனது படங்களால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் & வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னன் படத்தின் முதல் பாடலாக இசை புயல் - வைகைப்புயல் கூட்டணியில் வெளிவந்த ராசா கண்ணு பாடல் அனைவரது மனதையும் உருக்கிய நிலையில் அடுத்து ஏ ஆர் ரஹ்மானின் அட்டகாசமான நடன அசைவுகளோடு வெளிவந்த ஜிகு ஜிகு ரயிலு பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து இசை வெளியீட்டுக்கு பிறகு மாமன்னன் படத்தின் மெலடி பாடலான நெஞ்சமே நெஞ்சமே பாடலும் ரசிகர்களின் இதயத்தை வருடிய நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் கொடி பறக்க காலம் பாடல் வெளிவந்துள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் யுக பாரதி அவர்களின் புரட்சிகரமான வரிகளில் வெளிவந்திருக்கும் இந்த கொடி பறக்க காலம் பாடலை கல்பனா ராகவேந்தர் ரக்ஷிதா சுரேஷ் தீப்தி சுரேஷ் அபர்ணா ஹரிகுமார் ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். அரசு கலைக் கல்லூரி சேலம் என குறிப்பிடப்பட்டிருக்கும் அரங்கத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சி போன்ற காட்சி அமைப்போடு வெளிவந்திருக்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாமன்னன் படத்தின் அட்டகாசமான கொடி பறக்கும் காலம் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.