'பரியேரும் பெருமாள்', 'கர்ணன்' போன்ற வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ். சமூக கருத்துகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த வகையில் கொடுத்து கவனம் பெற்ற மாரி செல்வராஜ் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயின் மூவீஸ் தயாரிப்பில் உருவான மாமன்னன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைய்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். எனவே அவர் சினிமாவில் நடிகராக முழுவதாக விலகி முழு நேர மக்கள் பணியில் இறங்குவதாக தெரிவித்திருந்தார். அதன்படி மாமன்னன் திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாஸில் போன்ற அட்டகாசமான நடிகர்கள் படத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்பை உயர்த்தியுள்ளது. இறுதிகட்ட பணியில் இருக்கும் மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் எதிர்பார்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து அப்பாடலின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வடிவேலு குரலில் அமைந்துள்ள பாடல் வரும் மே 19 ம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து வெளியான அட்டகாசமான போஸ்டர் இணையத்தில் ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வடிவேலு குரலில் வெளியான பாடல் எப்போதுமே தனி சிறப்பு உண்டு. அவருக்கே உரித்தான ஸ்டைலில் அமைந்த அந்த பாடல்கள் பல தாசப்தங்கள் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அவர் குரலில் கடைசியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் அமைந்துள்ள ‘பணக்காரன்’ பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.