தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அடுத்து இயக்கும் படங்கள் இந்திய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானா கைதி படத்தின் இரண்டாவது பாகம் இந்த 2023ம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை த்ரிஷா இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ், மன்சூர் அலிகான், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

நேற்று ஜனவரி 11ஆம் தேதி தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஏற்கனவே வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

இன்று ஜனவரி 12ஆம் தேதி கோயம்புத்தூரில் நடந்த விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்காக தான் அப்டேட் எதுவும் தராமல் இருந்தோம். இப்போது வந்துவிட்டது இன்னும் ஒரு பத்து நாட்களில் எதிர்பார்க்கலாம். ப்ரோமோ இல்லை 10 நாட்களில் அப்டேட்களை எதிர்பார்க்கலாம். இனி ரெகுலராக இருக்கும்” என தெரிவித்தார். மேலும் படத்தை தீபாவளிக்கு திட்டமிட்டுள்ளீர்களா என கேட்டபோது, “அதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை இப்போது ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது” என பதிலளித்துள்ளார். ட்ரெண்டாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த பேட்டி இதோ…