தமிழ் சினிமாவில் ஆகசிறந்த இயக்குனராக பல தசாப்தங்களாக வலம் வந்தவர் இயக்குனர் இமையம் பாரதிராஜா. கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை அவர் திரைத்துறைக்கு செய்தவை அளப்பரியது. சமீபத்தில் கூட அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ இணைய தொடரில் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் பாரதி ராஜா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், திருவின் குரல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பாரதி ராஜா தன் மகனும் பிரபல நடிகருமான மனோஜ் பாரதி இயக்குனராக அறிமுகமாகும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் சுசீந்திரன் கதை மற்றும் வசனம் எழுதி படத்தை தயாரித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஷ்யாம் செல்வன், ரக்ஷ்னா, அப்புகுட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். வெண்ணிலா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஏஆர் சூர்யா ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

மார்கழி திங்கள் படத்தின் படபிடிப்பு பழனி அருகே கனகம்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கா சூழல் வயல் அருகே இயற்கை காட்சிகளுடன் நேற்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. திடீரென மழை பெய்து படப்பிடிப்பில் இடையூறு ஏற்பட்டது. மேலும் மழையுடன் பலத்த காற்று இடி மின்னல் என்று அந்த இடமே பயங்கராமாக காட்சியளித்திருகின்றது. அப்போது படபிடிப்பில் பெரிய குடை லைட் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இந்த நிகழ்வில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்தப்பியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மார்கழி திங்கள் பட தயாரிப்பாளர் சுசீந்திரன் வீடியோ ஒன்றில் கூறியது,

"சென்னையில இருந்து பெரிய பெரிய லைட் லாம் வரவெச்சு மக்காசோளம் தோட்டத்திற்கு நடுவே படப்பிடிப்பு தொடங்கினோம். திடீரென மழை, இடி, பயங்கரமான புயல் காற்று வந்தது எல்லோரும் ஸ்தம்பித்து போயிட்டோம். கொண்டு வந்த முக்கியமான லைட் லாம் விழுந்துடுச்சு.. அதுல ஒரு லைட் ல இடி விழுந்துடுச்சு.. அதிர்ஷ்டவசமா கடவுள் கிருபையால் 5 லைட்மேன் தப்பிச்சாங்க.. இந்த நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் உறுதுணையாக இருந்தாங்க.. அவங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த நிகழ்வு திரைத்துறையில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.