தமிழ் சினிமா தற்போது பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து விஜய் நடித்து வரும் இப்படத்தின் அறிவிப்பிளிருந்தே இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தின் முன்னோட்டம் வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலானது. இறுதிகட்ட படப்பிடிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள லியோ படக்குழுவினர் விரைவில் லியோ படப்பிடிப்பை முடித்து வரும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் லியோ படப்பிடிப்பின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வெளியாகவிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றதே’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கு பெற்றார். இதில் பேசிய அவர்,

“தங்கர் பச்சான் சாரை நேரில் மீட் பண்ணி பேசும்போது, அவர் முதலில் என்னை சந்திக்கனும் னு கேட்டார். நான் விலாசம் கொடுங்கள் சார் நான் வந்து பார்க்கிறேன் என்றேன். அது நல்லாருக்கு பா.. நான் வரேன் என்றார். அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்கு வந்து கிட்டதட்ட 2 மணி நேரம் படங்கள் பற்றி பேசி கொண்டிருந்தோம். எனக்கு அப்போ தான் தெரிந்தது. இன்னும் எவ்ளோ படிகள் திரைத்துறையில் இருக்கு.. நிறைய கத்துக்க வேண்டும் என்று.. அந்த காரணத்திற்கு தான் நான் முக்கியமாக இங்கு வந்த காரணம்.. வேற பேச எதுவும் நான் தயாரா எடுத்துட்டு வரல.. படக்குழுவினருக்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.. இந்த படம் ஜெயிக்கும்.. எப்பவும் போல ஷூட் லருந்து நேரா இங்க வந்துட்டேன். இப்போ திரும்பி படப்பிடிப்புக்கு போகனும். எல்லோரும் அங்க காத்திட்டு இருப்பாங்க..”என்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

பின் இதையடுத்து.. இயக்குனர் தங்கர் பச்சான், லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். அவர் தோட்டத்தில் விளைந்த பலாப்பழம் மற்றும் முந்திரிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருக்கு கொடுத்தார்.

இதுகுறித்து பேசிய இயக்குனர் தங்கர் பச்சான், "நான் ஒரு விவசாயி. நான் விளைவிச்ச பலாபழமும், எங்கள் தோட்டத்தில் விளைந்த முந்திரிகளையும் கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி..லோகேஷ் இன்று இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைக்குற ஒரு இயக்கனரா இருக்கார். அது நமக்கு பெருமையான ஒன்று. தொடர்ந்து வெற்றிகளை மட்டுமல்ல பல பேருடைய பார்வையில் அவர் மேலும் மேலும் சாதனைகளை படைக்கனும்.. எனக்காக விஜயை விட்டுட்டு வந்திருக்கார். எந்த இயக்குனர் இப்படி வருவாங்களா னு தெரில.. " என்றார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகும் ‘கருமேகங்கள் களைகின்றன’ படத்தில் பாரதி ராஜா, கௌதம் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் பின்னணி இசையமைத்துள்ளார். படத்திற்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.