ஒட்டு மொத்த தென்னிந்திய திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது நடிகர் சரத் பாபு அவர்களின் இறப்பு செய்தி. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகர் சரத் பாபு தனது 72 வது வயதில் காலமானார். முன்னதாக ஓரிரு வாரங்களுக்கு முன்பு நடிகர் சரத் பாபு உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதனை அவர்களது உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்ததோடு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் கடந்த சில தினங்களாகவே மிகுந்த அவதிப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வந்த நடிகர் சரத் பாபு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து அவருடைய பூத உடல் நேற்று (மே 22) ஹைதராபாத்தில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அவரது இறுதிச்சடங்குகள் சென்னையிலேயே நடைபெறுகிறது.

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்த சரத் பாபு அவர்களின் உறவினர்கள் அவரது கடைசி நிமிடங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் சரத் பாபு அவர்களின் சகோதரர் நம்மிடம் பேசும் போது, “அவருக்கு 71 வயது 9 மாதங்கள் 72 வயதிற்கு 3 மாதங்கள் குறைவு மிகவும் ஃபிட்டாகவும் நலமாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியத்திலும் மிகவும் நலமாக இருந்தார். அவர் எனக்கு வெறும் சகோதரர் மட்டுமல்ல எனக்கு ஒரு தந்தையை போன்றவர். எங்கள் குடும்பத்தில் எல்லா சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அப்படித்தான்…” என அவரது சகோதரர் பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி செய்திகள் குறித்து கேட்டபோது, “அவை மொத்தமும் பொய்யான செய்திகள், தேவையற்ற பொய்யான செய்திகள் அப்போது அவர் நலமாக இருந்தார் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மற்ற உடல் பாகங்களில் சில பாதிப்புகள் இருந்தது தான் ஆனால் நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் தான் நாங்கள் அவரை இழந்து விட்டோம்.” என்றார்.

மேலும் அவரிடம் கடைசியாக நடிகர் சரத் பாபு அவர்கள் உங்களிடம் பேசிய விஷயங்கள் என்னென்ன கேட்டபோது, “கடைசி தருணத்தில் அவருக்கு ட்ரக்கியாஸ்டமி செய்யப்பட்டள்ளதால் அவரால் பேச முடியவில்லை அதற்கு முன்பு வரை அவர் பேசிக் கொண்டிருந்தார்.” என தெரிவித்தார். தொடர்ந்து சரத் பாபு அவர்களின் இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெறுவதற்கான காரணம் குறித்து கேட்டபோது, “எல்லோரும், அங்கு இருக்கும் எல்லோரும் இவரது உடலை அங்கேயே வைக்க கேட்டனர், ஆனால் இவர் எப்போதுமே சொல்வார் என்னுடைய இறுதி சடங்குகள் கட்டாயமாக சென்னையில் தான் நடைபெற வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார்” என தெரிவித்துள்ளார். சரத் பாபு அவர்களின் சகோதரர் மற்றும் உறவினர்கள் அவரது கடைசி நிமிடங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட அந்த முழு பேட்டி இதோ…