நீண்ட காலமாக சோசியல் மீடியாக்களை கண்டுகொள்ளாத நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராமில் மாஸாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் தனது மகன்களோடு இணைந்திருக்கும் க்யூட்டான வீடியோவை வெளியிட்டு நயன்தாரா இன்ஸ்டாகிராமில் இணைந்திருப்பதை அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. அந்த வகையில் தனது திரை பயணத்தில் முதல்முறையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் அடுத்த சில தினங்களில் ரிலீஸாகவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக நடிகர் ஜெயம் ரவி உடன் இணைந்து நயன்தாரா நடித்திருக்கும் இறைவன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இறைவன் திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், வெகு விரைவில் இறைவன் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக Y NOT STUDIOS நிறுவனத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் அவர்கள் முதல் முறை இயக்குனராக இயக்கி வரும் டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 75 ஆவது திரைப்படமாக உருவாகும் புதிய திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் நடிகை நயன்தாரா தனி ஒருவன் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது.

இதனிடையே தற்போது இன்ஸ்டாகிராமில் நயன்தாரா என்ட்ரி கொடுத்தது தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவாக வெளியிட்டிருக்கும் வீடியோவில் மகன்களோடு கூலிங் கிளாஸ் அணிந்தபடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதுவரை தனது மகன்களான உயிர் மற்றும் உலக் இருவரின் முகங்களை வெளி உலகத்திற்கு காண்பிக்காத நடிகை நயன்தாரா தனது இரு மகன்களுக்கும் கூலிங் கிளாஸ் அணிவித்து அவர்களை வெளி உலகத்திற்கு காட்டி இருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைந்த சில நிமிடங்களிலேயே பலரும் அவரை பின் தொடர ஆரம்பித்து விட்டனர். அவரது அசத்தலான இந்த முதல் வீடியோவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்ற அலப்பறை கிளப்புறோம் என்ற பாடலோடு தனது இரு மகன்களையும் தூக்கியப்படி நயன்தாரா மாஸாக நடந்து வரும் கியூட்டான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அட்டகாசமான அந்த வீடியோ இதோ…