10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 57 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 57 வயது செல்லத்துரை, சிறுமியிடம் பரிசுப் பொருட்கள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனிமையில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, 10 வயது சிறுமி என்று கூட பார்க்காமல், சிறுமியைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து, உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளார். இதில், சிறுமிக்கு உடல் முழுவதும் பலமான ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பின்னர், அழுதுகொண்டே வீடு திரும்பிய சிறுமி, நடந்ததையெல்லாம் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், இது குறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 57 வயது முதியவர் செல்லத்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விசாரணையில், அந்த முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, பந்தநல்லூர் பகுதியில் 10 வயது சிறுமியை, 57 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்தது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.