தென்னிந்திய சினிமாவில் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை க்ரீத்தி ஷெட்டி, கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த உப்பென்னா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தொடர்ந்து அதே ஆண்டில் நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான ஷ்யாம் சிங்கா ராய் படத்திலும் கதாநாயகியாக நடித்த க்ரீத்தி ஷெட்டி, தொடர்ந்து பங்கார்ராஜு, தி வாரியர், மச்செர்ல்லா நியோஜகவர்கம், ஆ அம்மாயி குருஞ்சி மீக்கூ செப்பாலி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அடுத்ததாக முதல்முறை மலையாள சினிமாவில் களமிறங்கியிருக்கும் க்ரீத்தி ஷெட்டி, டொமினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துவரும் அஜெண்டே ரண்டாம் மோஷனம் படத்தில் தற்போது நடித்து வருகிறார்

முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ள கஸ்டடி திரைப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார். வருகிற மே 12ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இன்று மே 5ம் தேதி வெளிவந்த கஸ்டடி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்யேக பேட்டி அளித்த நடிகை க்ரீத்தி ஷெட்டி பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகுவதற்கான காரணத்தையும் பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், வணங்கான் திரைப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? ஏனென்றால் சூர்யா சார் இப்போது வெளியேறிவிட்டார்... நீங்கள் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்தீர்கள் கன்னியாகுமரியில் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தீர்கள் இப்போதும் படத்தில் இருக்கிறீர்களா? எனக் கேட்டபோது,

“உண்மையில் நான் 17 நாட்கள் படப்பிடிப்பிற்கு சென்றேன். ஆனால் இப்போது நான் தவிர்க்க முடியாமல் படத்திலிருந்து விலகிவிட்டேன். ஏனென்றால் எனக்கு தேதிகள் இல்லை. நிறைய நேரங்களில் படப்பிடிப்பு நின்றது. மீண்டும் தேதிகள் கேட்டபோது நான் ஏற்கனவே அனுமதி கேட்டு ஒரு படத்தில் கையெழுத்திட்டேன்… சொல்லப்போனால் சில படங்களுக்கு கையெழுத்திட்டேன்... ஆனால் சரியாக அந்த தேதிகள் தான் இவர்களும் கேட்டார்கள். எனவே பாலா சார் கேட்கும்போது ரொம்பவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் இதை பண்ண முடியவில்லை. ஆனால் உண்மையில் பாலா சார் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் அவரோடு இணைந்து வரும் காலத்தில் பணியாற்றுவேன் என எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இதில் பணியாற்றியது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. எனது திரை பயணத்திலேயே சிறந்த அனுபவமாக இருந்தது. நான் செட்டில் இருந்தேன் அல்லவா? அப்போது பாலா சாருக்கும் சூர்யா சாருக்கும் இடையேயான அந்த நல்ல உறவு, அன்பு, ஒருவரை ஒருவர் ரசிப்பது அதையெல்லாம் பார்த்தேன். எனவே அதைத் தவிர வேறு எதுவுமே இருக்க முடியாது” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை க்ரீத்தி ஷெட்டியின் முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.