தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் நடிப்பில் இந்த ஆண்டு தசரா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. நானியின் தசரா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் தசரா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. தற்போது அவர் நடிப்பில் தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ படமும் வெளியாகவுள்ளது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் தமிழில் ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ படத்திலும் கதாநாயகி மையப்படுத்தி உருவாகும் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா ஆகிய படத்திலும் நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் காதல் விவகாரம் குறித்து பல வதந்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையே துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் செய்தி பரவியது.சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன் நண்பரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இவர்தான் கீர்த்தியின் காதலன் என்று வைரலாக வதந்தி பரவியது. இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் "இந்த முறை என் அன்பான நண்பரை இந்த தேவையற்ற வதந்திகளில் இழுக்க வேண்டாம். நான் திருமணம் செய்யப்போகும் நபரை நானே அறிவிப்பேன். அதுவரை கொஞ்சம் பொறுமை காத்திருங்கள். ஆனால், நான் யாரையும் இதுவரை தேர்வு செய்யவில்லை" என்று பதிவிட்டு இருந்தார்.

விளக்கம் கொடுக்கப்பட்ட பின் கீர்த்தி சுரேஷ் பதிவு ரசிகர்களால் வைரலானது. விளக்கம் கொடுத்த பின்னும் கீர்த்தி சுரேஷ் வாழ்கை குறித்த வதந்தி இணையத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவர்களின் தந்தை விளக்கம் கொடுத்துள்ளார்.

“கீர்த்தியும் ஃபர்ஹானும் நீண்ட கால நல்ல நண்பர்கள்.. ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கீர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ள்ளார். அதை தவறான செய்தியாக மாற்றி சிலர் பரப்பிவிட்டார்கள். இதுகுறித்து இணையத்தில் பரவி வரும் அனைத்து செய்திகளும் தவறானது. இது போன்ற தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். ஒருவேளை கீர்த்திக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டால் கண்டிப்பாக நானே உங்களுக்கு முதலில் அறிவிப்பேன். இது போன்ற செய்திகளால் எங்கள் குடும்பம் மட்டுமல்லாமல் அவர் குடும்பமும் வேதனைக்குள்ளாகும். ” என்று விளக்கம் கொடுத்து வீடியோ பகிர்ந்திருந்தார். இதையடுத்து கீர்த்தி சுரேஷ் தந்தை கொடுத்த விளக்கம் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.