படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த நடிகர் சீயான் விக்ரம் தற்போது வெளிவந்திருக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் ஆதித்த கரிகாலனாக மிரட்டி இருக்கிறார். அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தை தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக ரிலீசாக உள்ள தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான OTT ரிலீஸ் உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திய தங்கலான் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவை தொடர்ந்து அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களுக்காக மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களிடம், தங்கலான் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்து, சமீபத்தில் வெளிவந்த டீசர், சீயான் விக்ரம் அவர்களின் லுக் என எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான ஒரு மாற்றத்தை கொண்டு வரும்? என கேட்டபோது, “தங்கலான் படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலேயே ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய படமாக இருக்கும். உலக திரைப்பட ரசிகர்கள் திரும்பி பார்க்கக் கூடிய ஒரு திரைப்படமாக இருக்கும். நடந்த வரலாற்றை இவ்வளவு அழகாக படைத்து அது ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் ஹீரோயிசத்தோடு உருவாகிறது. இப்போது நாங்கள் 9 உயரிய திரைப்பட விழாக்களை திட்டமிட்டிருக்கிறோம் இருக்கிறோம், ஆஸ்காரில் தொடங்கி பெர்லின், டொரன்டோ என ஒரு 9 விழாக்களை திட்டமிட்டு இருக்கிறோம். இந்த எல்லா விழாக்களுக்கும் தங்கலான் போகிறது. எனவே நிச்சயமாக இது பல விருதுகளை குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை தூண்டும் வகையில் சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படம் குறித்தும், சூர்யாவின் கங்குவா திரைப்படம் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட KE.ஞானவேல் ராஜா அவர்களின் முழு பேட்டி இதோ…