சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் சமீபத்தில் முடிவுற்றுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடத்த படக்குழு ஆயத்தமாகி வருகிறது. சஷிகாந்த் தயாரித்து வருகிறார்.

இதனிடையே கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளராகவும் படங்களைத் தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் உருவான முதல் படமான மேயாத மான் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்குயின் படம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய படம் ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார். தற்போது 5-வது படத்தை அறிவித்தார்.

இப்படத்தை அசோக் வீரப்பன் இயக்கவிருக்கிறார். படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் நாயகியாக அனகா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அனகா நட்பே துணை படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணிபுரியவிருக்கிறார்.