கர்நாடகாவில் தந்தையைத் துண்டு துண்டாக வெட்டி மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் உள்ள காகத்தி பகுதியைச் சேர்ந்த 59 வயதான சங்கரப்பாவுக்கு, 21 வயதில் ரகுவீர்குமார் என்ற மகன் இருக்கிறார். ரகுவீர்குமார் செல்போன் மூலம் விளையாடப்படும் இணையதள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பப்ஜி விளையாட்டில் அவர் அடிமைப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

மகனின் வீடியோ கேமால் எரிச்சலடைந்த ரகுவீரின் தந்தை, பப்ஜி விளையாடக்கூடாது என்று அடிக்கடி எச்சரித்ததாகத் தெரிகிறது.

சம்பவத்தன்று, ரகுவீர்குமாரின் செல்போனில் பேலன்ஸ் இல்லாமல் இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, பப்ஜி விளையாட வேண்டும் என்று தந்தையிடம் சென்று அவர் பணம் கேட்டுள்ளார். ஆனால், தந்தையோ பணம் தராமால் மகனைத் திட்டியதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால், கோபத்தின் உச்சிக்குச் சென்ற மகன் ரகுவீர், சமையலறையிலிருந்த அருவாள் மனையை எடுத்து வந்து, தந்தையின் தலையையும், ஒரு காலையும் துண்டாக அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதனிடையே, வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சங்கரப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கடந்துள்ளார்.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார், சங்கரப்பாவின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரகுவீரை கைது செய்தனர். இதனிடையே, சொந்த மகனே பப்ஜி விளையாட்டிற்காகத் தந்தையைக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.