கன்னியாகுமரி அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம்அடுத்த தேரிவிளையைச் சேர்ந்த 23 வயதான ஹரிஹரசுதன், அப்பகுதியில் உள்ள தெற்கு குண்டலைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் 17 வயது கல்லூரி மாணவியுடன், ஹரிஹரசுதன் மாயமாகி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள், ஹரிஹர சுதனின் வீட்டிற்குச் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி, அதனை ஹரிஹர சுதனின் வீட்டின் மீது எரிந்தனர். இதில், ஹரிஹர சுதனின் தாயார் ராஜலெட்சுமி, காயம் அடைந்தார்.

இது தொடர்பாக ராஜலெட்சுமி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 பேரைக் கைது செய்தனர்.

இதனிடையே, மாணவி மாயமான தொடர்பாக, தனது 17 வயது மகளை, ஹரிஹரசுதன் கடத்திச் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். அதன்படி, ஹரிஹரசுதன் மீது போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, கடத்தப்பட்ட மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று இரவு அவரை மீட்டனர்.

மாணவி மீட்கப்பட்டது இரவு நேரம் என்பதால், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, காலையில் காப்பகத்திலிருந்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட மாணவியிடம், கடத்தப்பட்டது குறித்தும், காதலன் ஹரிஹரசுதன் குறித்தும் விசாரணை நடத்தினர். பின்னர், மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதனிடையே, மாணவி கடத்தல் வழக்கில் தலைமறைவாகி உள்ள ஹரிஹரசுதனை, கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.