இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்த ஆக்சன் படமாக தயாராகி வரும் விஷால் 34 திரைப்படத்தின் அதிரடியான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விஷால் தொடர்ச்சியாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக வெளிவந்தது. வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் கதை களத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடும் வகையில் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்தடுத்து விஷால் நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் தயாராக இருக்கும் நிலையில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் விரைவில் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார் விஷால். துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2வது பாகமாக உருவாகும் இந்த துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வரிசையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 34-வது திரைப்படமாக உருவாகும் #விஷால்34 திரைப்படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைந்திருக்கிறார் விஷால். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் கமர்சியல் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரியுடன் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் இணையும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் படப்பூஜை நடைபெற்றது. பிரபல தமிழ் நடிகை பிரியா பவானி சங்கர் யானை படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இந்த விஷால் 34 படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். M.சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவில், உருவாகும் அதிரடி படமான விஷால் 34 படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் விஷால் 34 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த மிக முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவராக திகழும் கனல் கண்ணன் மாஸ்டர், இந்த விஷால் 34 திரைப்படத்தின் அதிரடியான கிளைமாக்ஸ் காட்சியின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். பக்கா ஆக்சன் படமாக இயக்குனர் ஹரியின் விஷால் 34 படம் உருவாக இருப்பதாக விஷால் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே படத்தில் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் அவர்களும் பணியாற்றி இருக்கும் நிலையில் பிரத்தியேகமாக கிளைமாக்ஸ் காட்சிக்காக கனல் கண்ணன் அவர்களும் இணைந்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. விஷால் 34 திரைப்படத்தில் கனல் கண்ணன் இணைந்திருக்கும் அந்த அறிவிப்பு இதோ…