உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 . லைகா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக உருவாக்கியதில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாபெரும் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி வெளியானது. ரசிகர்களின் ஆராவரத்துடன் வெளியாகி கோலாகலமாக கொண்டாடப்பட்டு திரையரங்குகளில் 4 வது நாளாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகின்றது. சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த இப்படம் நான்காவது நாளில் உலகமெங்கும் ரூ 200 கோடி வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இன்றும் கூட்டம் குறையாமல் திரையரங்குகள் நிரம்பி வழிகிறது. விரைவில் இப்படம் 500 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் நேற்று இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை பார்த்துள்ளனர். படம் பார்த்து முடித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் ஹாசன் கூறியது, "நான் ஒரு சினிமாவின் ரசிகன் அதுதான் என் முதல் அடையாளம். சினிமா கலைஞன் என்பது இரண்டாவது அடையாளம். என்னுடைய முதல் விருப்பம் ஆசையெல்லாம் சினிமாவை பார்க்க வேண்டும். அது நான் நடித்த படமாக இருந்தாலும் சரி மற்றவர் எடுத்த படமாக இருந்தாலும் சரி..

அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு சினிமாவாக அமைந்திருக்கிறது பொன்னியன் செல்வன். இதை ஒரு படமாகதான் நான் இப்போது பார்க்கிறேன். ஏனென்றால் இரண்டு படத்தையும் பார்க்கும் போது இதை நாம் முழு காவியமாகதான் கொள்ள வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார். கருத்து வித்யாசங்கள் மாற்று கருத்துக்கள் எல்லா படத்திற்கும் இருக்கும் அது இதில் இருந்திருந்தாலும் கூட மக்கள் இதை பெரிதாக ஆதரிக்கிறார் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். மெத்த மகிழ்ச்சியை எனக்கு அது அளிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையும் தமிழனின் பெருமையும் போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் முக்கியமான வீரன் திரு மணி ரத்னம் அவர்கள். அவரை பாராட்ட வேண்டும். இந்த படத்திற்காக அவருக்கு உறுதுணையாக தோள் கொடுத்து வாழ் கொடுத்து உதவியிருக்கும் நட்சத்திர பட்டாளம், படை பார்க்க பிரம்மிப்பாக இருந்தது. இது போன்ற அத்தனை நட்சத்திரங்களும் ஒன்றுகூடி சந்தோஷமாக இணைந்து பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. நல்ல ஒரு பொற்காலம் துவங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.. அதை நீங்களும் அவ்வழியே நடத்தி செல்ல வேண்டும். இது சாதாரணமான விஷயம் அல்ல போற்றப்பட வேண்டிய வெற்றி... என்றார் கமல் ஹாசன்.

கமல் ஹாசன் மணிரத்னம் அவர்களுடன் முன்னதாக நாயகன் என்ற மிகப்பெரிய வெற்றிபடத்தில் கூட்டணி அமைத்தனர். அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னுரை விளக்கத்திற்கு கமல் ஹாசன் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு அவரது 233 வது திரைப்படத்தின் ஆரம்ப கால வேலை தொடங்கியுள்ளது. பெரும்பாலும் அந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கவிருப்பதாக தகவல். ஆனால் அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகவில்லை. மேலும் கமல் ஹாசனின் 234 வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் மணிரத்தினம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கான வேலை அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.